பெரும்பான்மையின மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீதியமைச்சர் அலி சப்ரி செயற்பட வேண்டும். முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக சட்டத்தை மேல் நாட்டு சட்டம், தேச வழமை சட்டம் ஆகிய பாரம்பரிய சட்டங்களுடன் ஒப்பிட முடியாது. பௌத்த சாசனத்தை பாதுகாக்கவும், பௌத்த உரிமை பாதுகாக்கவும் இயற்றப்பட்ட சட்டங்களை நீக்க பௌத்த மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.
முஸ்லிம் சட்டத்தினால் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும். இவ்விடயம் குறித்து நீதியமைச்சர் எம்முடன் நேரடியான பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் விவாகச் சட்டம் குறித்து அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றினேன். இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் விவாக சட்டம் குறித்து கருத்துரைக்கவில்லை. மனித உரிமை கோட்பாட்டை முழுமையாக செயற்படுத்தும்போது மத காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது. நான் குறிப்பிட்ட கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் ஏற்றுக்கொண்டார்கள்.
நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அலி சப்ரி நீதியமைச்சராக இருந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவர் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அமைச்சராக இருந்து பதிலளித்துள்ளமை கவலைக்குரியது. முஸ்லிம் சமூகத்தின் மத்தியின் காணப்படும் தவறுகளை இவர் திருத்துவார் என எதிர்பார்த்தேன். ஆனால் இவரது செயற்பாடுகள் எதிர்பார்ப்புக்களை தோற்கடித்துள்ளது என்றார்.
-இராஜதுரை ஹஷான்