தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
முன்னறிவித்தல் எதுவுமின்றி தனக்கு விசேட பாதுகாப்பளித்தவர்கள் விலக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி முடிவடைந்த பின்னர் தனக்கு வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பு விலக்கப்பட்டது என தெரிவித்துள்ள சுமந்திரன் தனக்கு உயிருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் காணப்பட்டதால் 2014 ஜனவரி முதல் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மூன்று கொலை முயற்சிகள் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வழக்கு இன்னமும் தொடர்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முப்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பல வழக்குகள் காணப்படுகின்றன எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2018 ஒக்டோபர் அரசியல் குழப்பத்தின் போதும் 52 நாட்கள் தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு விலக்கப்பட்டது என தெரிவித்துள்ள சுமந்திரன் ஆனால் நாடாளுமன்றம் தலையிட்டு மீள விசேட பாதுகாப்பை வழங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டமை குறித்தோ அதற்கான காரணங்கள் குறித்தோ தனக்கு இன்னமும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.