சென்னை நீலாங்கரை அருகே ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் இந்து முறைப்படி மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (வயது 29); கோயம்புத்துார் வடவெள்ளியை சேர்ந்த ஸ்வேதா (வயது 26); இருவரும் சென்னையில் ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சின்னதுரை கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்தார். அதனால், தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலுக்குள் நடத்த விரும்பினார். தனது விருப்பத்தை வருங்கால மனைவி ஸ்வேதா மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து சின்னதுரை தனது உறவினர், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் புதுச்சேரி ஸ்கூபா டைவிங் பள்ளி நிறுவனர் அரவிந்தனிடம் தனது விருப்பத்தை கூறினார். உடனடியாக ஆழ்கடலில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன.
நேற்று (01) காலை 6.30 மணியளவில் இருவருக்கும் நீலாங்கரை பகுதியில் வங்காள விரிகுடா ஆழ்கடலில் திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடைகளை அணிந்து, படகில் கடல் பகுதிக்கு சென்றனர். பின்னர் இருவரும் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திக் கொண்டு கடலில் குதித்தனர்.
கடலின் மேற் பரப்பிலிருந்து இருந்து 60 அடி ஆழத்தில் சென்ற பிறகு மாலைகளை மாற்றிக் கொண்டனர். பின், மணமகள் ஸ்வேதாவுக்கு சின்னதுரை கடலுக்கு அடியியே தாலி கட்டினார். பின்னர் இருவரும் படகு மூலம் கரைக்கு வந்தனர்.
கடலுக்குள் நடந்த திருமணத்தை புகைப்படங்களை எடுத்து, சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது சமூக வளைதளங்களில் தற்போது வைரலாகிறது. மணமகன் சின்னதுரை கூறுகையில், ஸ்வேதாவிடம் ஆழ்கடலில் திருமணத்தை நடத்தலாம் என்ற போது முதலில் தயங்கினார். பின்னர் நீச்சல் குளத்தில் 03 நாள்கள் பயிற்சி கொடுத்த பிறகு ஸ்வேதா தைரியமாகி, ஒகே சொல்லி விட்டார். திருமணத்தை ஆழ்கடலில் நடத்திய அனுபவம் வித்தியாசமானது என்றார்.
இந்நிலையில், ஸ்கூபா டைவிங் பயிற்சி நிறுவனர் அரவிந்தன் கூறுகையில், ஆழ்கடலில் திருமணம் செய்ய நினைத்த போது, பூக்கள், மாலைகள் அனைத்துமே ஓரிடத்தில் இல்லாமல் மிதக்கும் சிக்கலை சந்தித்தோம். எனவே பூக்கள் மேலே வராமலிருக்க அலுமினிய குண்டுகளை இணைத்துக் கட்டினோம். மணமகளின் சேலை, மணமகளின் வேஷ்டியிலும் பேஸ்ட்களை ஒட்டினோம். இது கைகொடுத்தது. அடுத்து தாலி, மாலையிலும் அலுமினிய குண்டுகளை இணைத்திருந்தோம். நல்ல நேரத்தில் ஆழ்கடலுக்குள் மாலைகளை மணமக்கள் மாற்றிக் கொண்டனர். பின்னர் ஸ்வேதா கழுத்தில் சின்னதுரை தாலி கட்டினார். 40 நிமிடங்கள் திருமணம் நடந்தது. ஆழ் கடலில் இந்து முறைப்படி திருமணம் நடப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றார்.
பத்து ஆண்டுகளாக, கடலில் குப்பை கொட்டுவதை தடுத்து, உயிரினங்களை பாதுகாக்கும் சேவையில், என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் கிடைத்த அனுபவத்தில் தான், விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆழ்கடல் திருமணம் செய்தேன். மனைவி, அவரது உறவினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆதரவு கொடுத்தனர். கடலில், மீன், ஆமைகளுக்கு நடுவில் திருமணம் செய்தது, வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. சின்னதுரை, மணமகன்
கடலை பாதுகாப்பது அனைவரது கடமை. கடலின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர, ஆழ்கடல் திருமணம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த சின்னதுரை முன்வந்தார். அவருக்கு, ஏற்கனவே ஆழ்கடல் நீச்சல் தெரியும். சுவேதாவுக்கு, மூன்று நாள் பயிற்சி கொடுத்தோம். திருமண நிகழ்வு, 40 நிமிடம் ஆழ்கடலில் நடந்தது. கடல் அமைதியாக இருந்த நேரம் பார்த்து, திருமணம் நடத்தி முடித்தோம்.
எஸ்.பி.அரவிந்த், 40, ஆழ்கடல் பயிற்சியாளர்