மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டின் ஜனநாயக சீர்திருத்தங்கள் 2015 தேர்தல்களுடன் மியன்மாரில் ஆரம்பித்தன என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, 2020 நவம்பரில் இடம்பெற்ற தேர்தல் ஜனநாயக சீர்திருத்தங்களின் இரண்டாம் கட்டம் என வர்ணித்துள்ளது.
மியன்மாரில் காணப்பட்ட முன்னேற்றங்களுக்கு இராணுவத்தின் நடவடிக்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பெருமளவு மக்கள் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கிற்கு தங்கள் ஆதரவை வழங்கினார்கள் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற மியன்மார் நாடாளுமன்றம் பதவியேற்றிருந்தால் அது சீர்திருத்த நடவடிக்கைகளின் மற்றுமொரு கட்டமாக அமைந்திருக்கும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி அவர்களை இராணுவம் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.