இந்த விடயம் தொடர்பில் பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், “நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து மியன்மார் மக்களுக்கு நீதி கிடைக்க இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம்” என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த அந்நாட்டு இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.
இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மியான்மர் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆங் சான் சூகியை விடுவிக்க முயன்று வருகின்றனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சுமார் 495 பொதுமக்கள், ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியன்மார் இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியன்மார் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்திருந்தது.
அத்துடன், கடந்த வாரம் மியன்மார் இராணுவ அதிகாரிகள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்திருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மியன்மாரின் ஒன்பது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.
இதேவேளை, இராணுவ சதித்திட்டத்திற்கு எதிராக மியன்மாரில் நடந்த போராட்டங்களில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
இது இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் மிக மோசமான வன்முறையாகும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் 36 வயதுடையவர் எனவும், அவர் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றையவர் 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் எனவும், அவர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மியன்மாரின் தற்போதைய நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், மியன்மாரில் உள்ள அமெரிக்க தூதரகம் இது மிகவும் கவலையளிப்பதாக கூறியுள்ளது.
“மியன்மாரில் போராட்டக்காரர்களை சுட்டுக் கொல்வது வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டது” என பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
"ஜனநாயகத்தை நசுக்குவதற்கும், கருத்து வேறுபாடுகளைத் தூண்டுவதற்கும் எதிராக, எங்கள் சர்வதேச பங்காளிகளுடன் அடுத்த நடவடிக்கை எடுப்போம்." எனவும் அவர் கூறியுள்ளார்.
மியான்மரில் மிக பெரிய முதலீட்டாளரான சிங்கப்பூர், நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால் மியன்மாருக்கும் பிராந்தியத்திற்கும் கடுமையான பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.