இலங்கை விவகாரத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐ.நா சபைக்கு தைரியமில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிப் பொதுச் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்களின் முன்னாள் தலைவருமான சார்ள்ஸ் பெட்ரீ தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிப்பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நியாயமாக செயற்பட விரும்பும் அதிகாரிகள் இருந்த போதிலும் பிரதான சபையில் நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையை மையப்படுத்தி நீதியை எதிர்பார்த்து இருப்பின் அது இறுதியில் ஏமாற்றத்தையே அளிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிப் பொதுச் செயலாளர் சார்ள்ஸ் பெட்ரீ கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான்கீமுனினால் நியமிக்கப்பட்ட குழுவினால் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விவகாரத்தில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதை தவறவிட்டதை கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, மனித உரிமை பேரவை மற்றும் ஏனைய முகவர் அமைப்புக்களும் இதற்கு காரணம் என ஐக்கிய நாடுகளின் முன்னாள் உதவி பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.