இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பிலான புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி Julian Braithwaite நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை, சிரியா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கனடா, ஜேர்மனி, மொன்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய இலங்கை தொடர்பான மத்திய குழுவினால், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினால் வெளியிடப்படும் அண்மைய அறிக்கையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி Julian Braithwaite குறிப்பிட்டுள்ளார்.