“முஸ்லிம் சமூகமே வெளிநாட்டவரின் பணத்துக்காக தாய் நாட்டை விலை பேசும் சமூகமாக மாறாதே” என நாட்டை நேசிக்கும் முஸ்லிம் அமைப்பு எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! என தலைப்பிட்டு "தாய் நாட்டை நேசிக்கும் முஸ்லிம் அமைப்பு எனும் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று வெள்ளிக்கிழமை (19) துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த பிரசுரத்தில்,
நாம் பல வருடகாலமாக இந்த நாட்டில் வாழ்வது நாட்டிற்காக உயிர்நீத்த தேசப்பற்று கொண்டோரின் தியாகத்தினால் ஆகும், தமிழீழவாதிகள் மென்மேலும் முயற்சி செய்வது எம்மை சிங்கள சமூகத்திற்கு எம்மை அடிப்படைவாதிகளாக காண்பிப்பதற்கே ஆகும்.
தமிழீழவாதிகளது ஜெனீவா நோக்கிய பயணத்தில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொள்வது முஸ்லிம் சமூகத்திற்கு பாரியதொரு இழுக்கை ஏற்படுத்தும்,
ஈழவாதிகளின் தனிநாட்டு கோரிக்கையினை பலப்படுத்த முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக அது எதிர்கால முஸ்லிம் பரம்பரைக்கு பாரியதொரு கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்,
ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு இறைவனிடம் பய பக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் நன்மையை தேடி தரும், தீர்மானத்துக்குரிய செயலாகும்" என அல்குர்ஆன் இன் 3ஆவது அத்தியாயம் 186ஆவது வசனத்தை மேற்கோள் காட்டி,
எமது முஸ்லிம் சமூகம் வெளிநாட்டவரின் பணத்திற்காக எமது தாய் நாட்டினை விலை பேசும் சமூகமாக மாறி விடக்கூடாது என முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுக்கக் கூடிய வகையில் குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.