இவ்வாண்டு இறுதிக்குள் இலட்சக்கணக்கில் சீனச் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வரவுள்ளனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வாண்டு இறுதிக்குள் இலட்சக்கணக்கில் சீனச் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வரவுள்ளனர்!

இவ்வருடத்தின் இறுதி அரையாண்டில் சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றுக்கான விமானப் பயணங்களை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கலாநிதி பாலித கோஹன சுட்டிக்காட்டினார்.

சீனாவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றும் கலாநிதி பாலித கோஹன அங்கு பல்வேறு தரப்புக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

வெளிவிவகார அமைச்சர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் சுற்றுலாத் துறை முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இது தொடர்பில் பீஜிங்கில் இருந்தவாறு சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன வீரகேசரிக்கு மேலும் குறிப்பிடுகையில்

தற்போது சுற்றுலாத்துறை பாரிய பாதிப்புக்களை சந்தித்திருக்கின்றது. இந்நிலையில் சுற்றுலா துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியது அனைவரினதும் கடமையாகும். முக்கியமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த சுற்றுலாத்துறையில் தங்கி வாழ்கின்றனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நாம் சுற்றுலாத்துறையை செயற்படுத்தவேண்டிய தேவை காணப்படுகின்றது.

அந்தவகையில் வருடத்தின் இறுதி ஆண்டில் சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான விமான பயணங்களை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆறு மாத காலத்தில் சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள். அதன் ஊடாக எமக்கு பாரியதொரு அந்நிய செலாவணி நாட்டுக்குள் வரும். அதுமட்டுமன்றி சீனாவிலிருந்து வருடமொன்றுக்கு 159 மில்லியன் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அதில் ஒரு வீதத்தை இலங்கைக்கு எடுத்துக்கொண்டாலும் இலங்கையின் பொருளாதாரம் பாரிய முன்னேற்றத்தை அடைந்து விடும்.

எனவே நாம் அந்த அடைவு மட்டத்தை அடைவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எனவே இவ் ஆண்டின் இறுதி அரையாண்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என்றார்.

-Virakesari

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.