புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடரும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தொழிலாளர்களை அழைத்துவரும் நடவடிக்கைகயை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய போதிலும், தாம் குறித்த நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாடு திரும்புவதற்காக 45 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாகவும், 92 ஆயிரம் பேர் வரை இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடு திரும்புவதற்காக கோரிக்கை முன்வைக்கும் நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், புலம் பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மற்றும் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை என்பன உரிய பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.