இலங்கையின் 73 ஆவது தேசிய தினத்தை பேரபிமானத்துடன் கொண்டாடும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற இலங்கை மக்களுக்கும், நாட்டின் நலன் விரும்பிகள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றேன் என, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எமது நாடு சுதந்திரம் அடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவருமே தமது பங்களிப்புக்களை அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். இதன் பயனாக, ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு விடுதலை அடைந்து, 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்டது. இதனைப் பெற்றுக் கொடுப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளை இன்று நாம் நினைவு கூர வேண்டியது, எமது அனைவரினதும் தலையாய கடமையாகும்.
நாம் பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை, அதனைப் பெற்றுக் கொடுத்தவர்கள் கண்ட கனவை நனவாக்க வேண்டும். சுதந்திர இலங்கையின் பிரஜையாக இருப்பதை, நாம் அனைவரும் பெருமையாகக் கொள்வதைப் போல், எமது இலங்கைத் தாய் நாட்டையும் நாம் அனைவரும் நேசிக்க வேண்டும். இந்த நாட்டின் மீது பற்றுள்ளவர்களாகவும், இந்த நாட்டின் அபிவிருத்திக்காகவும் எங்களை நாம் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும்.
நாம் பெற்றுக் கொண்ட இந்த சுதந்திரத்தை, அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். இதற்கு இன, மத, மொழி, கட்சி, நிற பேதங்களையும் தாண்டி, "ஒரே நாட்டு மக்கள்" என்றவாறு அபிமானத்துடன், அமைதியாக, ஒற்றுமையாகச் செயற்படுவது, இன்றைய கால கட்டத்தில் நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
கண்ணியம், ஆன்மீக சுதந்திரம் உருவாகுவதன் மூலமே சுதந்திரம் பூரணத்துவமடைகின்றது.
( ஐ. ஏ. காதிர் கான் )