அரசாங்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன். ஆனால், அரசாங்கம் என்னை வெளியேற்றுமா என்பதை அறிய முடியவில்லை.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலாள அரசாங்கத்தை ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்து செல்லவே முயற்சிக்கிறோம். எமக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறியாமையை விமர்சிக்க முடியாது என கைத்தொழில் மற்றும் மூல வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துலரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் தற்போதைய நிலைமை, நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து பல கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சியின் உறுப்பினர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். எனது விவகாரம் குறித்து பேசுவதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.
எனக்கு எதிரான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கூற முடியாது. பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமில்லாமல் சிறு பிள்ளைகளைப் போல செயற்படுகிறார்கள். இவர்களை விமர்சிக்கவும், இவர்களை தூண்டி விடுபவர்களை விமர்சிக்கவும் நான் விரும்பவில்லை என்றார்.
-இராஜதுரை ஹஷான்