
சவூதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் 'விஷன் 2030' என்ற பெயரில் சவூதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சவுதியில் பெண்களுக்கு விதிக்கபட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 26 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் பெண்கள் வாகன ஓட்ட தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 2018ஆம் ஆண்டு சவூதி அரசு நீக்கி பெண்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்தது.
தொடர்ச்சியாக கால்பந்து போட்டிகளை பெண்களுக்கு தடை நீக்கப்பட்டது. மேலும், வரவாற்றிலேயே முதல்முறையாக சவூதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான தூதுவராக சவூதி அரேபியா நியமனம் செய்தது. இதனை போன்று தொடர்ச்சியாக சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சவூதி அரேபிய பெண்கள் இராணுவத்தில் சேரலாம் என்று சவூதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின்படி, சவூதி பெண்கள் சவூதி அரேபிய இராணுவம், ராயல் சவூதி வான் பாதுகாப்பு, ராயல் சவூதி கடற்படை, ராயல் சவூதி ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேரலாம் என்று செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பெண்கள் இராணுவத்தில் பணியாற்ற பெண்ணின் வயது 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் உயரம் 155 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
மேலும், வேலையில் சேர விரும்பும் பெண் தேசிய அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி கல்வி பெற்றிருக்க வேண்டும், சவூதி அல்லாதவருடன் திருமணம் செய்து இருக்க கூடாது. திருமணம் முடிக்காதவர் இராணுவத்தில் சேர்ந்தால் சவூதி அல்லாதவருடன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.