இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
கடுவல நகரசபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைய கருணா வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இது குறித்து ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்று வருவதால், மனுவை தொடர தேவையில்லை என்பதால் அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் நீதியரசர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் மனுவை மீளப் பெற்றுக்கொண்ட பின்னர் வழக்கை தள்ளுபடி செய்தது.
சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் திகதி திகாமடுல்ல பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கருணா அம்மான், தான் கொரொனாவினை விட ஆபத்தானவர் என்று பகிரங்கமாகக் கூறியதாகவும், ஒரே இரவில் 2,000 முதல் 3,000 இலங்கை வீரர்களைக் கொன்றதாக கூறியதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கருணாவை கைது செய்யவும், சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.