வீட்டு வன்முறைகள் கொலைகளாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்கவும் குடும்ப மோதல்களைக் கையாளவும் ஆலோசனை வழங்கவும் சிறப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அம்பாறையில் 24 வயது பெண் தனது 33 வயது கணவனால் குத்திக் கொல்லப்பட்டுள்ள அதேவேளை கினிகத்தேன பகுதியில் 27 வயது பெண் 34 வயது கணவனால் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து விசாரிக்க பொலிஸின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்துக்கு அறிவுறுத்தப்படும் என்றும் நாட்டிலுள்ள குடும்பப் பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்க துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் கணவன் மற்றும் தந்தையர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நீங்கள் வீட்டில் ஏதாவது துஷ்பிரயோகம் அல்லது வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால் 0112 444 444 எனும் இலக்கத்தில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.