ஷுக்ரா Part 02 ஆரம்பித்து விட்டது!
சர்வதேச விருது பெற்ற கல்முனை மாணவியையும் ஷுக்ராவையும் ஒப்பிட்டு யார் இவர்களில் சிறந்தவர் ? கல்முனை மாணவி ஷுக்ரா அளவிற்கு ஏன் புகழப்படவில்லை, பேசுபொருளாகவில்லை போன்ற பத்தாம்பசலித்தனமான விவாதங்கள் பரவ ஆரம்பித்துள்ளன.
இவ் இரண்டு மாணவிகளுமே திறமையானவர்கள் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. முதலில், சமூகத்தின் இதுபோன்ற திறமையான மாணவ மாணவிகளை ஒப்பீடு செய்து பேசுவதே மிகப் பிழையானது என்பதை நாம் உணர வேண்டும். ஒரு முதிர்ச்சி பெற்ற சமூகம் செய்யக் கூடாத செயல் இது.
ஷுக்ரா ஏன் இந்தளவு பேசுபொருளாக்கப்பட்டாள்?
பொருள்முதல்வாத நுகர்வுச் சமூகமொன்றில் வாழும் நாம், முதலில் சில எளிய சூழல் யதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
ஷுக்ரா பிரபலமான சிரச ஊடகம் ஒரு சிங்கள மொழி ஊடகம். சிங்களம் தெறிந்தவர்கள் மட்டும் தான் அதில் பிரபலமாகமுடியும்.
நாம் என்ன தான் சாதனை படைத்தாலும் அதை அவர்களுக்கு விளங்கும் மொழியில் கூறினால் மட்டுமே அங்கு அது எடுபடும்.
சிரச இலாப நோக்கத்தில் இயங்கும் ஒரு ஊடகம். எனவே சந்தைப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் மீது மட்டுமே அது கவனம் செலுத்தும். அவ்வாறு மார்க்கட் பண்ணப் படுவதற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது. வேறு சில தகைமைகளும் இருக்க வேண்டும்.
ஆனால் இவ் யதார்த்தங்களை மாத்திரம் வைத்து ஷுக்ராவின் திறமையை குறை மதிப்பீடு செய்வது சுத்த வக்கிரத்தனம்.
ஷுக்ராவின் அழகும், நளினமான பேச்சும் தான் அவரை செலிப்ரிடி ஆக்கியது என்று கூறுவதில் உண்மை இல்லாமலும் இல்லை.
ஆனால் அது மட்டுமே அவரின் சாதனையின் பின்னால் இருந்தது என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.
அடுத்து ஷுக்ரா முஸ்லிம் சமூகத்தில் இந்தளவு பேசுபொருளாக காரணம் சுக்ரா மீது சில முல்லாக்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நியூஸ் வெப்சைட்களும் சமூக ஊடகங்களில் மேற்கொண்ட கீழ்த்தரமான அணுகுமுறைகள் தான். அவர்களால் ஒரு சின்னப் பெண்ணின் தன்மானம் சுயகெளரவம் பந்தாடப்பட்டது.
எனவே அவ் மதவாத முல்லாக்களுக்கு எதிர் முகாம் ஒன்றும் சமூக ஊடகங்களில் உருவானது. இது மிக இயல்பானது.
ஆனால் சர்வதேச விருது பெற்ற கல்முனையைச் சேர்த்த மாணவி தொடர்பாக அவ்வாறான இரு முகாம்கள் காணப்படவில்லை. எனவை அவர் சமூக ஊடகங்களில் பெறுமளவு பேசுபொருளாக அமையவில்லை. இந்த எளிய யதார்த்தத்தை கூட ஏன் எங்களால் விளங்க முடியாமல் உள்ளது.
நான் இப்படிக் கேட்கிறைன், ஷுக்ராவோ அல்லது சாதனை படைத்த கல்முனை மாணவியோ முஸ்லிம் பெண்ணாக இல்லாமல் மாற்று இனத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் முஸ்லிம் சமூகத்தில் அவர்கள் இந்தளவு பேசுபொருளாக ஆகியிருப்பார்களா?
இந்தளவு முக நூல் பதிவுகளும் வட்ஸ்அப் செய்திகளும் பகிரப்பட்டிருக்குமா?
நிச்சயமாக முஸ்லிம் சமூகம் அதை பெரியளவில் கண்டு கொள்ளாது என்பதே உண்மை. ஆனால் பெரும்பான்மை சமூகம் ஷுக்ராவை மிகப் பெரியளவில் கொண்டாடி வருகிறது. இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகம் எந்தளவு கோத்திர உணர்வு கொண்டது என்பதை மனச்சாட்சியுடன் சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
-ரம்ஸி ராசிக்