கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யும் எண்ணம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (06) உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
"கொழும்பு துறைமுகம் எமது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
$ads={2}
நல்லாட்சி அரசாங்கத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் இலங்கை அரசாங்கம் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஒரு பகுதியையேனும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்."
இதேவேளை தற்போதைய அரசாங்கம் இந்திய நிறுவனம் ஒன்றுடன் புதிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
"கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் கடந்த ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தற்போதைய அரசாங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதனூடாக தர்க்கத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஆனால் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு தற்போதைய அரசாங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்."
இதனிடையே நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சில விடயங்கள் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
“தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் 400 மில்லியன் டொலர் நிதியில் நீர்த்தடாகம் ஒன்றை நிர்மாணித்தார்.
கப்பல் தரிப்பிடத்தின் கேந்திர நிலையம் எனும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் பிரதி பலன் காரணமாகவே இன்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பேசு பொருளாக மாறியுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை விற்பனை செய்யமாட்டோம் என்பதை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் உறுதியளிக்கின்றேன்.
ஆனால் நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சில விடயங்கள் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது."
இதேவேளை துறைமுக அதிகார சபையின் ஊடாக கிடைக்கப்பெறும் வருமானம் மூலம் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
"துறைமுக அதிகாரசபையின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.
துறைமுக அதிகார சபையின் ஊடாக கிடைக்கப்பெறும் வருமானம் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டது.
திறைசேரியிடம் இருந்து கடன் பெற வேண்டிய அவசியம் கிடையாது எனவும் குறித்த அறிக்கையில் தெளிவு படுத்தப்பட்டிருந்தது”
எவ்வாறாயினும் 2022 ஆண்டிற்குள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும் என்பதுடன் மேற்கு முனையத்தின் பணிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
“எனினும் 2022 ஆண்டிற்குள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும். அதேபோல் துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.
அது மாத்திரம் அல்ல ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ஆட்சிக் காலப்பகுதியில் 6 முனையங்கள் அமைக்கப்படும்.
எனவே நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யாமல் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம்” என்றார்.