'சூப்பர் முஸ்லிம்' என்ற நாமத்தில் ஒரு தீவிரவாத அமைப்பு இலங்கையின் கல்முனை பகுதியில் இயங்கி வருவதாக சிங்கள பத்திரிகையான 'திவயின' செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குறிப்பிட்ட அந்த அமைப்பின் தலைவராக செயற்படுபவர் வைத்தியர் கலந்தர் லெப்பே முஹம்மத். இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
இந்நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தின் போது அரச சார்பற்ற அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் பணம் வசூலித்து அப்பணத்தின் மூலமே இவ்வமைப்பை துவங்கியுள்ளார்.
அக் காலப்பகுதி தொட்டு இவர் தனது மத ரீதியான தீவிரவாத கொள்கையைப் பரப்பி வருகின்றார். 2019ஆம் ஆண்டளவில் இவரின் பிரச்சாரம் இன்னும் தீவிரமடைந்துள்ளதுடன், இவருடன் தற்போது 300 பேர் வரை கூட்டு சேர்ந்துள்ளனர்.
இன்னும் 1,000க்கு மேற்பட்டோர் இவர்களுடன் கைகோர்த்துள்ளதாக இராணுவப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இப்போது கல்முனை பகுதியின் வீடுகளில் ஆண் பெண் இரு சாராருக்கும் தீவிரவாத பிரச்சாரங்களை கலந்தர் லெப்பை போதித்து வருகிறார். மேலும் பொத்துவில் மற்றும் மாத்தறை பகுதிகளிலும் இவரது பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன.
$ads={2}
இவர்களின் நோக்கம் ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்தி இலங்கையில் ஆட்சி மேற்கொள்வதாகும்.
இவ்வமைப்பைச் சேர்ந்த ஆண்களுக்கு தங்களின் பெற்றோர், சகோதர சகோதரிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது, மேலும் நோய்வாய்ப்பட்டால் மருத்துவம் செய்யக் கூடாது, தமது மனைவிமாரை வீட்டை விட்டு வெளியே அனுமதிக்க முடியாது போன்ற மதத்தீவிரம் அடைந்த கட்டுப்பாடுகள் குறித்த தலைவரினால் போடப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
-எம்.எம். அஹமத்