நாம் உலகில் இல்லாத ஒன்றை கேட்கவில்லை; எடுத்த முடிவை கைவிட முடியாத பிடிவாதமே இங்கு ஏற்பட்டுள்ளது! அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாம் உலகில் இல்லாத ஒன்றை கேட்கவில்லை; எடுத்த முடிவை கைவிட முடியாத பிடிவாதமே இங்கு ஏற்பட்டுள்ளது! அலி சப்ரி


கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்ய வேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிட முடியாத பிரச்சினையே இங்கு உள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படுவார்கள் என தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துத் தொடர்பில் எழுந்திருக்கும் விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


$ads={2}


இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எந்தவொரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியாமல் போவதையே அடிப்படைவாதிகள் எதிர்பார்க்கின்றனர். எந்தவொரு சமூகத்துக்கும் எதிராக அநீதி ஏற்படும்போது அதனை அடிப்படைவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற கருத்திலே கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி இருந்தும் எமது நாட்டில் அது மறுக்கப்படும்போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் அடிப்படைவாதிகளின் கைகளுக்குள் இலகுவில் சிக்கிக் கொள்வார்கள் என தெரிவித்திருந்தேன். அதனை சில ஊடகங்கள் திரிபுபடுத்தி தெரிவித்திருக்கின்றன.


அத்துடன் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமான கோரிக்கையல்ல. உலகில் 195 நாடுகளில் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


உலக சுகாதார அமைப்பும் அதனை அனுமதித்துள்ளது; அதனடிப்படையிலேயே எந்த நிபந்தனையிலாவது அடக்கம் செய்ய கோருபவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை; அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்க வேண்டும் என யாரும் தெரிவிக்கவில்லை.


அத்துடன் கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் நானும் அவர்களின் நிலைப்பாட்டிலேயே இருப்பேன். ஆனால் தகனம் செய்ய வேண்டும் என தெரிவிப்பவர்கள் விஞ்ஞான அடிப்படையில் எந்த விடயத்தையும் உறுதிப்படுத்துவதில்லை. ஆனால் அடக்கம் செய்வதால் வைரஸ் நீரில் கலந்து பரவுவதற்கு விஞ்ஞான ரீதியிலான எந்த அடிப்படையும் இல்லை. அது ஒருபோதும் அவ்வாறு ஏற்படாது என வைரஸ் தொடர்பாக விசேட நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அதேபோன்று உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.


அவ்வாறான நிலையில், இலங்கையில் மாத்திரமே அடக்கம் செய்ய அனுமதி வழங்காத நிலைமை காணப்படுகிறது. அதனால்தான் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழு இது தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து நியாயமான தீர்மானம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என நாங்கள் கோரியுள்ளோம்


$ads={1}


இதில் எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக நாங்கள் யாரையும் பலவந்தப்படுத்தவில்லை. அத்துடன் அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என்றிருந்தால், இன்று இலகையில் 40,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அந்தத் தொற்றாளர்களின் உமிழ் நீர், சிறுநீர் மற்றும் இதர தேவைக்களுக்காக பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மண்ணுடன் கலந்து விடுகின்றன. இவர்களின் கூற்றுப்படி வைத்தியசாலையை சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்பட வேண்டும்.


எனவே, நாங்கள் உலகில் இல்லாத ஒன்றை கேட்கவில்லை. தகனம் செய்வதற்கு பதிலாக அடக்கம் செய்யவே அனுமதி கேட்கிறோம். அதற்கு உலக சுகாதார அமைப்பும் அனுமதி வழங்கியிருப்பதாலே கேட்கின்றோம். அத்துடன் தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்து தீர்மானம் எடுத்தவர்களுக்கு அதனை கைவிடமுடியாத நிலையிலேயே அதில் பிடிவாதமாக இருக்கின்றனர் என்றார்.


-எம்.ஆர்.எம். வஸீம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.