கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்ன செய்வது என தீர்மானிப்பது மக்களின் உரிமை என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே அரசாங்கம் தனது முடிவை எடுத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ஐக்கியதேசிய கட்சி எப்போதும் மத சமூகங்களிடையேயான ஒற்றுமையை ஊக்குவித்துள்ளது என தெரிவித்துள்ளதுடன் கட்சி பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
மத நம்பிக்கைகளை பின்பற்றுவது இலங்கை மக்களின் அடிப்படை உரிமை என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சுகாதார அதிகாரிகளை பின்பற்றும் அதேவேளை அரசாங்கம் இந்த விவகாரத்திற்கு உடனடியாக உரிய தீர்வை காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது. இவ்வாறான விடயங்களை அரசியல் மயப்படுத்தக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.