இதன்போது அங்கு சென்ற நகர சபை உறுப்பினர் ஒருவர் தங்கள் கட்சி ஆதரவாளர்களை தனிமைப்படுத்த வேண்டாம் எனக்கோரி சுகாதாரத் துறையினருடன் முரண்பட்டு அவர்களை விடுவிக்க முயன்ற சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது
மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரியவ.ருவதாவது, தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் வியாபார மேம்பாட்டு குழுவைச் சேர்ந்த 40 பேர் கம்பளை கீரப்பனையில் தங்கியிருந்து பணிகளை செய்து வந்த நிலையில், அதில் ஆறு பேருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் உரிய சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்
இந்நிலையில் கம்பளை நகர சபையின் பொதுச் சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய மேற்குறிப்பிட்ட தொற்றாளர்கள் தங்கியிருந்த வீட்டை கடந்த வெள்ளிக்கிழமையன்று தொற்று நீக்கம் செய்வதற்கென நகரசபை உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் சிலருடன் கீரப்பனையில் அமைந்துள்ள குறித்த வீட்டுக்குச் சென்றுள்ளனர்
இதன் போது உத்தியோகஸ்தர் சிலர் சுகாதார விதிமுறைகளை மீறி தொற்று நீக்கம் செய்யச் சென்ற வீட்டில் இருந்த யுவதிகளுடன் இணைந்து செல்பி எடுத்து கொண்டதாக தெரிய வருகிறது.
இதையடுத்து மேற்குறிப்பிட்ட நகர சபை உத்தியோகஸ்தர்களை பொதுச் சுகாதார அதிகாரிகள் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்த சென்றுள்ளனர்.
இதன்போது அவ்விடத்திற்கு வந்த நகர சபை உறுப்பினர் ஒருவர் தங்கள் கட்சி ஆதரவாளர்களை தனிமைப்படுத்தக் கூடாது எனகோரி சுகாதார அதிகாரிகளுடன் முரண்பட்டதுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கவும் முயன்றுள்ளார் எனினும் சுகாதார அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்து குறித்த நபர்களை தனிமைப்படுத்தினர்.