அட்டுலுகமை மக்கள் கொரோனாவுடன் மட்டுமன்றி இனவாத ஊடகங்களுடன் போராட வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அட்டுலுகமை பிரதேசத்தை தனிமைப்படுத்தி ஒரு மாத காலம் கடந்து விட்டது. அட்டுலுகமை நான் பிறந்த ஊர் (தற்போது அட்டுலுகமைக்கு வெளியில் வசிக்கின்றேன்). பல கட்டங்களில் அட்டுலுகமை தொடர்பாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் என நினைத்தாலும் ஊரை ஒழுங்குபடுத்த வேண்டி பல நடவடிக்கைகளை செய்தாக வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலையில் ஒரு கட்டுரை எழுதக் கூட நேரம் கிடைக்கவில்லை, பிரச்சினையின் பரிமாணம் அவ்வளவு பெரியது.
களுத்துரை மாவட்டத்தின் அதிக சனத்தொகை அடர்த்தி கொண்ட கிராமம் அட்டுலுகமை. தற்போது அங்கு கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது.
அட்டுலுகமையில் ஆரம்பத்தில் இரண்டு பேர்களுடன் ஆரம்பமான கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு அதிகாரிகளின் அசமந்த போக்கு பிரதான காரணமாகும். இது தொடர்பாக நாங்கள் சட்டத்தரணி ஹிதாயதுல்லாஹ் தலைமையில் சுகாதார அமைச்சிற்கு சென்று முறைப்பாடு செய்தோம். இதன் போது தேசிய ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அதற்கு முன்பு அட்டுலுகமையில் தனிமைப்படுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
ஆரம்பம் துவக்கம் இன்று வரை அட்டுலுகமையில் மட்டும் மேற்கொள்ளும் PCR பரிசோதனைகள் முடிவுகள் ஏன் ஒரு வாரம் கழித்து வெளிவருகின்றமையின் மர்மம் புரியவில்லை.
பின்பு களுத்துறை மாவட்டத்தின் தொற்று நோய்த்தடுப்பு பிரிவு எங்களுடன் 2.5 மணி நேர கலத்துரையாடலை மேற்கொண்டனர். இதில் என்னுடன் வைத்தியர் ஷானாஸ், மற்றும் சட்டத்தரணி ஹிதாயதுல்லாஹ்வும் கலந்து கொண்டனர்.
அந்த நீண்ட கலந்துரையாடலின் பின்பே அட்டுலுகமையில் தனிமைப்படுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.
அட்டாளைச்சேனை வைத்தியர், Dr. சுஹைல் ஏற்படுத்தித் தந்த தொடர்பின் மூலம் பல முறை இலங்கை வைத்திய சங்கத்தை சேர்ந்த வைத்தியர் ஹரித் அளுத்கமகே அவர்களுடன் தொடர்பு கொண்டு நிலமைகளை விளங்க வைத்தோம்.
அட்டுலுகமையின் சனத்தொகை அடர்த்தியை மையமாக வைத்து, உடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் ஊரடங்கை அமுல்ப்படுத்துமாறு வேண்டினோம் அவரும் அதனை உடன் அமுல்படுத்துமாறு பகிரங்கமாக ஊடகங்களில் அறிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. ஊர் மட்டத்தில் தாமாகவே ஊரடங்கை பிறபித்துக்கொள்ள வேண்டும் என்ற கலந்துறையாடல் தற்போது நடைபெறுகிறது.
அட்டுலுகமையில் பள்ளிவாயல்கள், பிரதிநிதிகள், ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள், அரசியல் தலைமைகள் உள்ளடங்களான கொரோனா முகாமைக்குழுவும், ஊரின் இளைஞர்களும் நிலமையை கையாள்வதில் கடுமையாக உழைக்கின்றனர். மொத்த ஊரும் ஒன்றாக இணைந்து தொழிற்படுகிறது.
அத்துடன் ஊரில் உள்ள வைத்தியர்கள் சுகாதாரத் துறையில் பணியாற்றுவோர் ஒரு குழுவாக பல வழிகாட்டல்களையும், உதவிகளையும் தொடராக செய்கின்றனர். சமூகம் ஓரளவிற்கு ஒழுங்குபடுத்தப்பட்டு செயற்படுகிறது.
இவ்வளவு நடக்கும் போதும் இனவாத ஊடகங்கள் மிகப் பெரிய பொய்களை ஒவ்வொரு நாளும் தவறாமல் ஒளிபரப்புகிறது. உறுதியாக சொல்ல முடியும் அட்டுலுமகயில் கிடைப்பது போன்ற ஒத்துழைப்பு சுகாதாரத்துறைக்கு எங்கும் கிடைப்பதில்லை. இதுவரை 2,500 மேற்பட்டோர் PCR செய்துள்ள நிலையில் யாரும் PCR செய்ய வருவதில்லை என பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். அதை விட கொரோனா நோயாளிகள் துப்புவதாக அடுத்த பொய்யை பரப்புகின்றனர்.
இந்நிலையில், பல ஊடகஙலகளுடன் தொடர்பு கொண்டு உண்மையான நிலமையை நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு வேண்டினோம். ஒரு சில முஸ்லிம் ஊடகங்களைத் தவிர யாரும் இதுவரை உதவ முன்வரவில்லை.
இந்த இக்கட்டான கட்டத்தில் அட்டுலுகமை மக்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் சட்ட, ஊடக உதவி உற்பட பல்வேறு உதவிகள் தேவைப்படுகிறது.
வெளியில் உள்ளவர்கள் நினைப்பது போல் அல்ல அட்டுலுகமை பலமான ஒரு கிராமம். அட்டுலுகமையை வைத்து அவர்கள் முஸ்லிம் சமூகத்தை சீரழிக்க முற்படுவதை அட்டுலுகமை மக்கள் எல்லா வகையிலும் எதிர் கொள்வர். ஒரு சில போதைக்கு அடிமையானவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களை வைத்து ஊரை மட்டிடமுடியாது. சில, பலவீனங்கள் இருப்பதை மறுப்தற்கிற்கில்லை.
அட்டுலுகமை மக்கள் தெளிவாக உள்ளனர் ஒன்றுபட்ட அட்டுலுகமையாக இந்த சோதனையான கட்டத்திலிருந்து இருந்ததை விட பன்மடங்கு மாற்றங்களுடன் ஒரு புதிய அட்டுலுகமையாக அவர்கள் வெளிவருவார்கள்!
எம்.என் முஹம்மத்
பேருவளை (Edited by Yazh News)