கம்பளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பிரதேசம் முடக்கப்படுமா என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இது தொடர்பில் சக செய்தி ஒன்றிற்கு கம்பளை நகராதிபதி சமந்த அருன குமார அவர்களிடம் வினவியபோது கம்பளை பிரதேசத்தை முடக்க இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும் கம்பளை பிரதேசத்தில் சுமார் 600 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கம்பளை நகரில் கோழிக்கடைகளில் தொழில் செய்யும் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட போது சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாவும் தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள், கோழிக்கடைக்கு வந்து சென்றவர்கள் என விசாரணை செய்யும் போது அது பெரிய வலையமைப்பாக உள்ளதாகவும், முடியுமானவரை அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் உருவாக்கியுள்ள கோழிக்கடை கொத்தணியானது இன்னும் கம்பளை பிரதேசத்தில் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கம்பளை பிரதேசத்தில் சுகாதார வழிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றுவதாக இல்லை என இன்றும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும், இந்நிலை தொடருமானால் பிரதேசத்தை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.