நாட்டினுள் புதிய வகை தொற்றுநோய்கள், எதிர்காலத்திலும் ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய தெரிவிக்கின்றார்.
பிரித்தானியா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில், புது வகை கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கொரோனா தொற்றின் புதுவடிவமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
$ads={2}
தொற்றுநோய்களையும், தொற்றாத நோய்களையும் இதற்கு முன்னர் நாம் சவாலாக எதிர்கொண்டுள்ளோம். எமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தினாலேயே அனைத்தையும் எதிர்கொள்ள முடிந்தது.
இந்நிலையில், பாரம்பரிய உணவினை நாம் முக்கிய காரணியாக பார்க்கின்றோம். புது வகை கொரோனா தொற்று இதுவரை ஏற்படவில்லை என்ற போதிலும், எதிர்காலத்திலும் புதிய தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆறாவது தொற்றுநோயாக உலக சுகாதார ஸ்தாபனம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தொற்றுநோய் ஒன்று ஏற்படுவதை நாம் தொடர்ச்சியாக காண்கின்றோம்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய மேலும் குறிப்பிட்டார்.