கலகெதர - ரம்புக்கன வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதன் சாரதி உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (27) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலையம் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த கனரக வாகனத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாகவே அதனை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
$ads={2}
இது தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதனை அதிகாரிகளிடமும் அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
விபத்தின் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வண்டி மேலும் சில வாகனங்களுடன் மோதிச் சென்று வர்த்தக நிலையம் ஒன்றையும் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கனரக வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துவதற்கு முன்னர் வாகனத்தை நன்கு பரீட்சித்து பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
பஸ் ,மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களை செலுத்தும் சாரதிகள், வாகனத்தை செலுத்துவதற்கு முன்னர் வாகனத்தின் இயந்திர பிரிவு,வாகனச் சில்லுகள் மற்றும் சமிஞ்கை ஒளி விளக்குகள் ஒழுங்காக இயங்குகின்றனவா? என்பது தொடர்பில் பரீட்சித்து பார்த்ததன் பின்னரே அதனைச் செலுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாத சந்தர்ப்பங்களிலே இது போன்ற விபத்துகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதனால் சாரதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
-செ.தேன்மொழி