மீரிகமை பகுதியில் மது அருந்திய நிலையில் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீரிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொட்டேவத்த – கீனதெனிய பகுதியில் நான்கு பேர் நேற்று முன்தினம் மதுபானம் அருந்தியுள்ள நிலையில் அவர்களில் இருவர் திடீரென உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, ஒருவரின் சடலம் மீரிகமை வைத்தியசாலையிலும் மற்றைய நபரின் சடலம் வரகாபொல வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 54 மற்றும் 47 வயதுகளையுடைய இரண்டு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், குறித்த இருவரினதும் தாயார் உயிரிழந்துள்ளதாகவும், தாயின் இறுதிச் சடங்குகளின் பின்னர் அவர்கள் மது அருந்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர்களுடன் மது அருந்திய மற்றுமொரு நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, இது தொடர்பான விசேட விசாரணைகளை மீரிகமை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.