நிதானமாக வாசித்தால், நிரந்தரமான இன்பங்களை தக்க வைத்து கொள்ள முடியும். வாசித்து உங்கள் கருத்துக்களையும், முறைப்பாடுகளையும் கூறுங்கள் என்று கேட்டவனாக.!
இன்றைய உலகின் மட்டுமல்ல, ஆதி காலம் தொட்டே 'வாலிபர்கள்' என்றால், சமுதாயமே நடு நடுங்கியது. ஆனால், இந்த காலத்தில் அது தலைகீழாக மாறிவிட்டது..
காரணம் என்ன?
இதற்கு தீர்வுகள்தான் என்ன? என்பதை மார்க்கம், உளவியல் இரண்டையும் இணைத்து ஆழமாக இல்லா விட்டாலும், எமக்கு புரியும் அளவுக்கு உற்று நோக்குவோம்.
வாலிபர்களை நெறிப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பு அந்தந்த குடும்ப உறுப்பினர்களுக்கே அதிக உரிமையுண்டு என்பது எமக்கு நன்றாகவே தெரியும்..
ஆனால், இதன் போது பல பிரச்சினைகள் சமகாலத்தில் உருவாகி வருகின்றமையை கண்ணூடாக கண்டமையினால் இந்த அழகிய வழிமுறைகள்..
ஒவ்வொரு பிரச்சினையுடனும், அதற்குரிய தீர்வை பதிவிடுகிறேன்.
பிரச்சினை 01:
'படி படி' என்று தன் பிள்ளைகளிடம் சொல்வது..
இது தவறல்ல ; ஆனாலும் முறை பிழை..
தீர்வு:
"இந்த நேரத்தில் கட்டாயமாக படிங்க எனதருமை மக்களே..! இவ்வாறு இவ்வாறு படிக்கலாமே..!" என்று அன்பாக, பண்பாக கருத்துக்களை சொல்லுதல்..
ஏனென்றால், எல்லோரும் படிங்க என்று சொல்வது பொதுவான விடயம் ; எவ்வாறு படிப்பது என்று எத்தனையோ மாணவர்களுக்கு வழிகாட்டப்படவில்லை என்பதே யதார்த்தம்..
பிரச்சினை 02:
தன் பிள்ளைகளுக்கு முன்னே 'நம்முட பிள்ளைகள் எங்கே படிக்க போகுது' என்று அசால்டா சொல்வது..
தீர்வு:
இந்த இடத்தில் உள்ளத்தை இரு வகையாக உளவியலாளர்கள் பிரிக்கின்றார்கள்.
01- எந்த கேலியையும் உடைத்து செல்லும் தைரியமான உள்ளம்.
02- தான் செய்யாத ஒன்றுக்காக வலியை அனுபவிக்கும் போது, நொறுங்கி விடும் உள்ளம்.
உண்மையிலேயே உங்கள் பிள்ளை படிக்கவில்லை என்று எந்த ஆதாரத்தை வைத்து கூறுகிறீர்கள்?
சில நேரம் நீங்கள் உறங்கி கொண்டிருக்கும் வேளையில், உஜாராக தன் உறக்கத்தை உதறி விட்டு படிக்கும் பிள்ளைகளாக இருக்கலாமே..!
சரி, உண்மையாகத்தான் படிக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் படிப்பதற்கு எது மகன் / மகள் உனக்கு தடையாக இருக்கிறது? என்பதை பண்பாக கேட்டு விளக்கலாமே!
எல்லோர் முன்னாலும் அவமானப்படுத்துவது என்பது, சிலவேளை தற்கொலைக்கு கூட தயக்கமின்றி செய்யலாம். அந்த மனோபக்குவம் கொண்டவர்களே வாலிபர்கள்..செய்த வரலாறுகளும் ஏராளம்.
இறைவன் எம்மை பாதுகாப்பானாக..!
ஒரு முஸ்லிமின் மானம் கஃபாவை உடைப்பதை விட பெரிய பாவம்" (ஹதீஸ்)
பிரச்சினை 03:
'படி படி' என்று சொல்லாதீர்கள்..இது வரையிலும்..
தீர்வு:
படிக்க சொல்லும் சில பெற்றோர்கள் குறைந்தது படிப்பதற்கான ஓர் அமைதியான, ஆர்வம் தரக்கூடிய இடத்தை அமைத்து கொடுப்பதில்லை.
ஆய்வு இடம் என்பது நீங்கள் படிப்பு அல்லது வேலைக்காக மட்டுமே அர்ப்பணிக்கும் ஒரு பகுதி. நீங்கள் சரியான படிப்பு இடத்தை உருவாக்க வேண்டும். இப்போது இதற்கு மேசை இல்லா விட்டாலும், இதுதான் படிப்பதற்கான இடம் என்றாவது ஒதுக்கி, களத்தை அமைத்து கொடுக்க வேண்டும்.
பிரச்சினை 04:
சிரித்துப் பேசுவதே கிடையாது. இதெல்லாம் அவசியமா? என்று கேட்கும் சில பெற்றோர்கள் கூட..
தீர்வு:
#புன்முறுவல் கூட சதகா/ தானம் (ஹதீஸ்)
உளவியலாளர்கள் கூறுகிறார்கள்: சிரிப்பதால் மூளைக்கு செல்கின்ற சில நரம்புகள் புத்துணர்ச்சி அடைகின்றன..
சில பெற்றோர் கூட தன் மூத்த மகன் வளர்ந்து விட்டால் சிரிப்பதும் இல்லை, பேசுவதற்கு ஒரு மாதிரியான கூச்சம்.. இது ஏன்?
வாலிப வயது என்பது அன்பை மட்டுமே ஏங்கும் வயது.
"நீங்கள் அன்பை கொடுக்கவில்லை என்றால், வேறு பக்கம் அன்பை தேடி பாவத்தில் வீழ்கிறார்கள்"
(நிறைய வாலிப, யுவதிகளின் வட்ஸப் ஸ்டேடஸ் இல் இவ்வாறு Love சார்ந்து அமைந்ததற்கு பெற்றோர்களே மிக பிரதானமான காரணம்.)
காலம் கடந்து விட்ட பின், நீங்கள் எவ்வளவு பாசம் காட்டினாலும், அது வெறும் வேஷமாகவே வாலிப, யுவதி நெஞ்சங்களுக்கு தெரியும்..
சிறு வயதிலிருந்து முறையான, அளவான அன்பை கொட்டி வளர்த்து வாருங்கள்.
பிரச்சினை 05:
தன் பிள்ளைகளின் குறைகளை வெளியில் சொல்லித் திரிதல்.. சில வேளை அது உண்மையில் குறையாக கூட இருக்காது..
தீர்வு:
உளவியலாளர், அறிஞர் மாஸ்லோ 1954 யில் மனித தேவைகள் குறித்த மரபு ஒன்றினை உருவாக்கி தமது நூலில் தமது சித்தாந்தங்களை விபரித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிடும் மிக முக்கியமான விடயமாவது:
"சிறுவர்களுக்கும், வளர்ந்தோருக்கும் மதிப்பு மற்றும் புகழுக்கான தேவை மிக முக்கியமானது எனவும் அது உண்மையான சுய மதிப்புக்கும், கௌரவத்திற்கும் முன்செல்கிறது எனவும் மாஸ்லோ தெரிவிக்கிறார். மேலும், மதிப்புத் தேவையை இரு வகையாக பிரிக்கின்றார்:
01- ஒருவருக்கான மதிப்பு (கௌரவம், சாதனை, நிபுணத்துவம் சுதந்திரம்)
02- கீர்த்தி பெற விரும்புதல் அல்லது மற்றவர்களிடமிருந்து முறையான மதிப்பை எதிர்பார்த்தல்.
சுருக்கமாக சொல்ல போனால்..
என்ன பிரச்சினையாக இருந்தாலும், பிரச்சினையுள்ள இடத்தில் மட்டும் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால், மாணவர்கள் தமது இலக்கை நோக்கிய பாதையை நிறுத்தி, நீங்கள் மற்றவர்களிடம் பேசிய வார்த்தைகளையே எண்ணி, மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்பு 100 வீதம் உள்ளது.
பிரச்சினை 06:
தன் பிள்ளை சிறந்த ஒழுக்கமான பிள்ளையாக வர வேண்டும் என்பது எல்லோரினுடைய கனவு. ஆனால், சிலர் வீட்டினுள்ளேயே, பெரிய கட்டுப்பாடு யாப்பு ஒன்றே தன் +18 வயது பிள்ளைகளுக்கும் வைப்பது
தீர்வு:
சில பெற்றோர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. நல்லது, கெட்டது எது என்பதை தன் கண்ணூடாக அறிய வேண்டுமென்றால், உலகத்தை பற்றி அறிய வேண்டும்.. அதற்கு வெளியில் முறையான நண்பர்களுடன் அனுப்பலாமே..!
"இந்த பிஞ்சு வயதில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.. நதியை போல.. ஓரிடத்தில் தங்கினால், அழுக்காகி விடுவோம்..!"
பிரச்சினை 07:
எக்காரணம் கொண்டும் தன் மகனை இழிவாக பார்க்காதீர்கள்.
தீர்வு:
ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்பவர்களே, தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் தவ்பா (மன்னிப்பு) செய்பவர்கள்..
சில தவறுக்காக தண்டிக்காமல் கண்டிக்கலாம்.. ஆனால், இழிவாக நினைக்க கூடாது. இது உங்கள் குழந்தை அல்லவா..! "காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பார்களே..! நீங்கள் மரணித்தாலும், உங்கள் பிள்ளை உங்களது பிள்ளையே தான்..
பிரச்சினை: 08
குழந்தைக்கு தன் பேச்சால், மாற்றம் செய்தல்.
தீர்வு:
நீ இதை செய்யாதே..! என்று கூறி விட்டு, அதை அவர்களே செய்தல்.
ஊருக்கு மட்டும் உபதேசமல்ல; தனக்கும் தான்.. உங்கள் பேச்சால் பிள்ளைகளை மாற்றுவதை விட நடைமுறையில் மாற்றுவது பலமே பலம்.
பிரச்சினை: 09
தன் பிள்ளைகளுக்கு முன்னால், கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பது.
தீர்வு:
பிள்ளைகள் பேசினால், (அடிப்பன் சாக சொல்லி) இவ்வாறெல்லாம்.., பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை, கேட்டதையே பேசுகிறன..! எம்மை முதலில் மாற்ற முயற்சிக்க வேண்டும்..!
இறைவனின் தொடர்பை அதிகம் கூட்டி கொள்ள வேண்டும்..
பிரச்சினை 10:
'தன் பிள்ளை எதிர்காலத்தில் பிரகாசிப்பானா...??' யோசித்து யோசித்து சிலர் மன நோயாளி ஆகி விட்டார்கள்..!
தீர்வு:
கவலையை விடுங்கள்..! தன் பிள்ளையிடமே கேளுங்கள்.. 'எந்த துறையில் விருப்பம்' என்று கேட்டு, அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்..! உங்கள் ஆசையை திணிக்காதீர்கள்..!
"ஆய்வு செய்வதும் ஓர் ஆளுமையே..! ஆய்வு செய்து ஆரோக்கியமாக வாழ்வோம்..!"
-ரஜா முகம்மத்
(Researcher, Student of Psychology)