ஒரு சிறந்த சமூகம் உருவாக ஆளுமை கொண்ட இளைஞர்கள் இன்றியமையாதவர்கள்!
சமூகத்தின் எதிர்காலம் என்பது அச் சமூகத்தின் இளைஞர்களின் கையிலே தங்கியதாகக் காணப்படுகின்றது. அது மாத்திரம் அல்லாமல் நிலையான சமூக நலன்களை பெற்றுத்தர வழிதாரர்களாகவும் காணப்படுகின்றனர்.
அவ்வாறான வலிமை பொருந்திய இளைஞர் சமூகமொன்றை எதிர்ப்பார்த்த நிலையில் சமுதாயம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. நல்ல பல மாற்றங்கள் ஒரு வளமான தேசத்தினைக் கட்டியெழுப்ப வழிகோருகின்றது.
அந்த வகையிலே பண்பாடு, கல்வி, விளையாட்டு, கலை அம்சங்கள், ஏனைய திறமைகள் போன்றன மூலமாக சமூகத்திற்கான மாற்றங்கள் அவசியப்படுகின்றன. இளைஞர்கள் திடமான நம்பிக்கை கொண்டு எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் அவை சாதனை பயணம் என்ற நிலையை எட்டும்.
மாற்றங்கள் என்று சொல்லப்படுவது சமூக முன்னேற்றத்தினை நோக்கிய உந்து சக்திகளாக காணப்படுகின்றன. ஒரு நல்ல சமூகம் உருவாக்கப்படுவது இளைஞர்கள் எனும் படையினூடாகவே அன்றி வேறில்லை.
உதாரணமாக கிராமப்புற சூழலில் கல்வி கற்ற அல்லது ஏனைய திறமைகள் கொண்ட இளைஞர்கள் உருவாகின்ற போது அச்சமூகம் சார்பான அடிமட்ட நிலை, தாழ்வு சிந்தனை போன்ற தகர்க்கப் பட்டு தலைநிமிர்ந்து வாழக்கூடிய நிலைமைகள் உருவாகின்றன. அதே போன்று அச் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்க கூடிய ஆளுமை கொண்ட மனிதப் புனிதர்கள் தோற்றம் பெறுகின்றனர்.
மேலும் போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், தீய பழக்க வழக்கங்கள் என்பன போன்ற சமூக விரோத செயல்கள் இல்லாத முறையான சமூக மாற்றத்தினையே சமூகம் எதிர்பார்க்கின்றது. இத்தகைய செயற்பாடுகளில் ஒரு சில இளைஞர்கள் ஈடுபடக்கூடிய காரணத்தால் சமூகம் வேண்டி நிற்கின்ற மாற்றங்கள் கேள்விக் குறியாக அமைந்து விடுகின்றன. இத்தகைய முறை கேடான செயற்பாடுகள் இளைஞர்கள் இணைந்து தடை செய்ய முனைகின்ற போது நிச்சயமாக தவிர்க்கப்படும்.
இளைஞர்கள் என்று சொல்லும் போது ஆண்களை மட்டும் குறிப்பதாக அமையப்பெறாது பெண்களாலும் சமூக மாற்றத்தை உண்டு பண்ண முடியும் என்பதற்கான சான்றுகள் இக்காலகட்டத்தில் ஆதாரங்களாக அமைந்துள்ளன.
எத்தனையோ பெண்கள் விளையாட்டு, கலை, கல்வி, தொழில் என்பன போன்ற பல்வேறு துறைகளிலுமே தமது பங்களிப்புகளை செய்து வாழ்வில் சாதனைகளை படைத்து சமூக முன்னேற்றத்திற்கு காரண கர்த்தாக்கள் ஆக மாறியுள்ளனர்.
சமூகத்தின் பலமான ஒரு குழுவாகவே இளைஞர்கள் காணப்படுகின்றனர். எந்த துன்ப துயரங்களையும் இடர்பாடுகளையும் தகர்த்து எரிகின்ற சக்தி அவர்களுக்குண்டு. மேலும் சிறந்த ஆளுமை மிக்க தலைமத்துவங்களாக இளைஞர்கள் உருவாகின்ற போது சமூகம் எதிர்பார்க்கின்ற நல்ல பல மாற்றங்களை நிச்சயமாக ஈடுசெய்ய முடியும்.
'வழித்தடம்'- All University Muslim Student Association
M.N Fathima
Eastern University of Sri Lanka