மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து நாட்டின் ஏனைய பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (23) திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, சுகாதார விதிமுறைகளுக்கமைய பாடசாலைகளை மீள் திறப்பதற்கு கல்வி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதன் காரணமாக மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திட்டமிட்டவாறு நவம்பர் 09ஆம் திகதி ஆரம்ப்பத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இதன்பின்னர் எதிர்வரும் 2 வாரங்களுக்கு இரண்டாம் தவணை விடுமுறை நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கோரியிருந்தது.
இதன் பிரகாரம் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் திறக்கப்படும் என கடந்த 19ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தரம் 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை தொடர்பிலும், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கடைசித் தீர்மானம் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.