அழிக்கப்பட்டுள்ள வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியில் மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவாகும் என வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.A.C வேறகொட தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வில்பத்து சரணாலயத்தை அண்மித்த பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
குறித்த பகுதியில் மரங்களை மீள நடுவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இரண்டு மாதங்களுக்குள் செலவிடப்படும் தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிதித் தொகை ரிஷாட் பதியூதீனின் தனிப்பட்ட நிதியிலிருந்து செலவிட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.
வில்பத்து சரணாலயத்தில் மரங்களை மீள நடுவதற்காக கணிப்பிடப்பட்ட அறிக்கை, ரிஷாட் பதியூதீனுக்கும், நீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிலத்தை பதப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு, குறைந்தது ஐந்து வருடங்களாவது அந்த வனப் பகுதியை பராமரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், 2,500 ஏக்கருக்கான மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிப்பதற்காக சுமார் 50 கோடி ரூபா நிதியை ரிஷாட் பதியூதீன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2,500 ஏக்கர் நிலப்பரப்பிற்கு நடுவதற்கான மரக்கன்றுகள் தம்மிடம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக மரக்கன்றுகளை வளர்ப்பதற்காக தவரணை தயாரிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வேறகொட தெரிவித்துள்ளார்.