சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று (09) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில், நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 3 வாரங்களுக்கு இணையம் மூலமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இணையம், வானொலி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் திட்டம் நவம்பர் 15 முதல் ஆரம்பமாகும்.
இது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடலாவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர் நியமனம் விரைவாக வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.