ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் முதல் தவணையாகப் போட்டப்பட்ட தடுப்பூசியின் முடிவின்படி 70.4 வீதம் பயனளித்துள்ளது.
அத்துடன், இரண்டாம் தவணையாகச் செலுத்திய தடுப்பூசியின்படி 90 வீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்றைய நாள் கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமானது என தெரிவித்துள்ளது.
அத்துடன், உலகம் முழுவதும் இந்தத் தடுப்பூசியை குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பதில் ஒரு அடி முன்னேறினால் போதும் என பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அஸ்ட்ராஜெனிக்காவுடன் இணைந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் மூன்று பில்லியன் மக்களுக்காவது தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதே தங்களின் இலக்கு என ஒக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை 23 ஆயிரம் பேர் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர் எனவும் ஆகையால் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நிறைவான தரவுகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள், நிதியுதவி செய்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என நிறையப் பேரின் பங்களிப்பு உள்ளது என்றும் அவர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தத் தடுப்பூசி சாத்தியமில்லை எனவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.