
வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகர்களுக்கு பணம் வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வீதி சமிக்ஞை விளக்குகளில் பச்சை விளக்கு எரியும் போது யாசகர்களுக்கு பணத்தை வழங்குவது மற்றும் வீதி வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
$ads={2}
அத்துடன் வீதி சமிக்ஞைகளுக்கு அருகில் யாசகம் பெறும் யாசகர்களுக்கு எதிராக தேசிய வீதிகள் சட்டத்தின் 50ஆவது ஷரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பிரதேசங்களில் உள்ள யாசகர்கள் உண்மையான யாசகர்கள் அல்ல. அவர்கள் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். யாசகர்களில் முதலாளிமாரும் இருக்கின்றனர்.
தொழிலாக யாசகம் பெறும் நபர்கள், சேகரிக்கப்படும் பணத்தை மாலை நேரங்களில் தமது முதலாளிகளிடம் வழங்குகின்றனர். அந்த பணத்தில் ஒரு பகுதி இவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
தொழிலாக யாசகம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.