இலங்கையில் கொரோனா காலப்பகுதியில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா காலப்பகுதியில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்!!


-எம்.ஐ.அப்துல் நஸார்

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது தொடர்பான கேள்விக்கு, அரசாங்கத் தலைவர்கள் வழங்கும் மாறுபாடான தகவல்கள் காரணமாகவும் ஒருவருக்கொருவர் முரண்படுவதன் மூலமும் அரசாங்கம் சங்கடத்துக்குள்ளாகியுள்ளதோடு குறித்த விடயம் வினோதமான திருப்பத்தை அடைந்துமுள்ளது.


கொரோனா காரணமாக மரணித்த முஸ்லிம்களை அடக்கம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாகவும், அடக்கம் செய்யவதற்கு ஏற்ற ‘வரண்ட நிலத்தை’ அடையாளம் காணுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் திடீரென அறிவிக்கப்பட்டது. 


இந்த விடயம் உடனடியாக சுகாதார அதிகாரிகளால் மறுக்கப்பட்டது. அதன்பின்னர், நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கும் விதத்தில் ‘தொலைதூர பகுதியில்’  வரண்ட நிலத்தில் மட்டுமே அடக்கம் செய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. தற்போது சுகாதார அதிகாரிகளே இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த அமளிதுமளியில் இனவாத கருத்துக்களை வெளிப்படுத்தும் பொது பல சேனா அமைப்பின்  செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ‘வஹாபி குழுக்கள்‘ தகனம் செய்வதை விட அடக்கம் செய்வதையே ஊக்குவிப்பதாகத் தெரிவித்ததோடு சமயச் செல்வாக்கிற்கு உட்படாது, சுகாதாரத் துறையின் கருத்துக்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


$ads={2}


இலங்கையில் காலனித்துவ கால கட்டளைச் சட்டத்தினை அதிகாரிகள் பின்பற்ற முனைகின்றனர். இது கொள்ளை நோய் மற்றும் தொற்று நோய்களால் மரணித்தவர்களை குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இறந்தவுடன் விரைவாக அகற்றப்பட வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துகின்றது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டம் அத்தகைய அகற்றல் முறைகளாக அடக்கம் அல்லது தகனம் செய்ய அனுமதிக்கிறது.


அடக்கம் அல்லது தகனம் தொடர்பாக ஒழுங்கு முறைகளைச் செய்ய அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களை அகற்றுவது தொடர்பில் அடக்கம் அல்லது தகனம் செய்வதற்காக அக் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் விசேட நடைமுறைகளை கடைப்பிடிக்க முடியும் என  விதிமுறைகள் வெளிப்படுத்துகின்றன. 


எவ்வாறெனினும், கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்படட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தம்,  கொரோனா காரணமாக உயிரிழப்பவர்கள்  மற்றும் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள் ‘தகனம் செய்யப்படுதல் வேண்டும்’ என அறிவித்தது.


தமது சமய நம்பிக்கையின் பிரகாரம் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்படக் கூடாது என முஸ்லிம்கள் நம்புகின்றனர். இது தவிர, உலகம் முழுவதிலும் அடக்கம் செய்தல் என்பது பல்வேறு மக்களிடையே கலாசாரமாகவும் பாரம்பரியமாகவும் காணப்படுகின்றது. உலகிலுள்ள 180 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இது அனுமதிக்கப்பட்டுள்ளதோடு நடைமுறையிலும் காணப்படுகின்றது.


$ads={2}


இது வரை 5.5 மில்லியன் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 1.27 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கையினைப் பொறுத்த வரை 2020 நவம்பர் 11 ஆம் திகதியன்று மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,759. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 45 ஆகும். கொரோனா


கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரை கையாளும் விதம் தொடர்பில் வழிகாட்டல்களை கடந்த 2020 மார்ச் மாதம் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. உலக சுகாதார நிறுவனத்தின்  வழிகாட்டல்களில் அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ் வழிகாட்டுதல்களுக்குள், இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் உடலைப் பார்க்க முடியும், ஆனால் தொடக் கூடாது. இறந்தவரினதும், குடும்ப உறுப்பினர்களினதும் கலாசார மற்றும் சமூகப் பாரம்பரியங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படக் கூடாது, ஆனால் அடக்கம் செய்வதற்கு அல்லது தகனம் செய்வதற்கு முன்னதாக தமது அன்புக்குரியவர்களால் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.


உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை புறக்கணித்து, தன்னிச்சையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை அதன் தனித்துவமான வழியில் பயணிக்கிறது. கொரோனா தொற்றினால் உயிரிழந்த அல்லது உயிரிழந்ததாக சந்தேகிக்கப்பட்ட எவரையும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அடக்கம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்படுவது முஸ்லிம் சமூகத்தை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த அனுமதி மறுத்தல் தீர்மானத்திற்கு எவ்வித விஞ்ஞானபூர்வமான காரணங்களும் கிடையாது.  தகனம் என்பது தற்போது முஸ்லிம்களின் மனதில் மிகப் பெரும் அச்சமாக மாறியுள்ளது.


பல முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக வீடுகளிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த ஜனாஸாக்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் கொரோனா தொற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் அவை தகனம் செய்யப்பட்டுள்ளன.


பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலர் ஏப்ரல், ஜூன் மாதங்களில் தகனம் செய்வதற்கு எதிராக அடிப்படை உரிமை வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தொற்றுநோய் பரவல் காரணமாக நீதிமன்றங்கள் தொடராக மூடப்பட்டதால் இந்த வழக்குகள் இதுவரை விசாரிக்கப்படவில்லை.


மார்ச் 30, 2020 வரை, சுகாதார அமைச்சின் இணையதளத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது ஒரு பாதுகாப்பான தெரிவாக பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் மார்ச் மாதம் 29 ஆம் திகதியன்று முதலாவது முஸ்லிம் நபரின் மரணம் இடம்பெற்றபோது, இறந்தவரின் ஜனாஸாவைப் பார்ப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்படாமல் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது. அதுவரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் இரவோடு இரவாக அவ்வமைச்சினால் நீக்கப்பட்டது, அதிலிருந்து இன்றுவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


நவம்பர் 10 ஆம் திகதி வரையான நிலவரத்தின் பிரகாரம் தகனம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்களின் எண்ணிக்கை 21 ஆக காணப்படுகின்றது (இரண்டு உயிரிழப்புக்கள் தேசிய கொரோனா உயிரிழப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை) ஒரு ஜனாஸா தகனம் செய்யப்பட்ட பின்னர், மரணித்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோனை முடிவு வெளியிடப்பட்டது.


நாட்டின் மக்கள் தொகையில் ஒன்பது சதவீதம் முஸ்லிம்களாக இருந்த போதிலும், கொரோனா தொற்றினால் இறந்தவர்களுள் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாவர். குடும்ப உறவினர்களின் தகவல்களின் பிரகாரம், தகனம் செய்யப்பட்ட 21 ஜனாஸாக்களில் 14 பேர்  பெரும்பாலும் வீடுகளில் சாதாரண வியாதிகளால் உயிரிழந்தவர்களாவர். ஆனால் அவர்களின் ஜனாஸாக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கொண்டு செல்லப்பட்டன. வைத்தியசாலை அதிகாரிகளின் கூற்றில், மரணித்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


$ads={2}


தற்போது முஸ்லிம்கள் செறிந்து வாழும் கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்தியில் உள்ள பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள் பொதுவாகவே ஏழைகள். இப் பகுதிகளில் யாரேனும் இறந்தால் அவர்களது உடல்களை தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் கிடைக்கும் வரை பிரேத அறையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ளதாக பி.சி.ஆர் பரிசோதனை முடிவு கிடைக்கப் பெற்றால், குறித்த குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றன அல்லது இராணுவ தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. உடலைத் தகனம் செய்வதற்கு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கையொப்பம் இட வேண்டும்.


கொரோனா தொற்றுக்குள்ளான ஜனாஸாக்கள் ஒரு சவப்பெட்டியில் வைத்து சீல் வைக்கப்படுகின்றன. இதற்காக குடும்ப உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபா செலுத்த வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன் ஒரு நபர் மட்டுமே ஜனாஸாத் தொழுகையினை தொழுவதற்கு அனுமதிக்கப்படுகிறார். சில நேரங்களில் அவர்கள் இறந்தவரின் முகத்தைப் பார்க்கக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.


கடந்த ஒக்டோபர் மாதம் கொரோனா இன் இரண்டாவது அலை ஏற்பட்டதோடு, பல தகனங்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உத்தரவிட்டது, அவற்றுள் சில மரணங்கள் சுகாதார அமைச்சினால் திடீர் மரணங்கள் என வகைப்படுத்தப்பட்டிருந்தவையாகும்.


கடந்த மே மாதம் 04 ஆம் திகதி, கொழும்பில் தேசிய வைத்தியசாலையில் நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 வயதான பாத்திமா ரினோசா, தொற்று நோய் வைத்தியசாலைக்கு (ஐ.டி.எச்) மாற்றப்பட்டார். மறுநாள் காலையில் அவர் உயிரிழந்ததாகவும் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. பி.சி.ஆர் சோதனை முடிவு அவரது ஜனாஸா தகனம் செய்யப்பட்டதன் பின்னரே வெளியானதோடு மரணச் சான்றிதழில் ‘சந்தேகத்திற்கிடமான சி-19’ காரணமாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 06 ஆம் திகதி தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய அரசாங்க வைத்தியர் ஒருவர் ரினோசாவின் பி.சி.ஆர் சோதனை முடிவில் தொற்று இல்லை எனத் தெரிவித்தார். றினோசாவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் அடுத்த நாள் அவர்களுள் எவருக்கும் தொற்று இல்லை என கண்டறியப்பட்டதால் மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.


கடந்த மே மாதம் 5 ஆம் திகதி, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 64 வயதான அப்துல் ஹமீத் ரபீயுதீன் மரணமடைந்தார். வழக்கமான நோய் காரணமாக இறந்துவிட்டதாக அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியர் ஒருவர் அறிவித்தார். ஜனாஸாவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு ஒரு பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டபோது அவரது குடும்பத்தினர் அவரை அடக்கம் செய்ய தயாராகி கொண்டிருந்தனர். பி.சி.ஆர் சோதனைக்கு உத்தரவிடப்பட்டது, அவரது ஜனாஸா கொரோனா சந்தேகத்திற்குரியதாக தெரிவிக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவரது மரணம் தேசிய கொரோனா இறப்புகளின் மொத்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவரது ஜனாஸா தவறுதலாக தகனம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை வழக்கை தாக்கல் செய்துள்ளதோடு அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல்வேறு காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி, 19 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறப்பிலிருந்து படுத்தபடுக்கையாக பெற்றோரின் பராமரிப்பிலிருந்த  இளைஞர்  தூக்கத்திலிருந்தபோது உயிரிழந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்துவந்த மருத்துவர், அடக்கம் செய்வதற்கான ஆவணங்களை தயார் செய்தார். ஆனால் பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதால் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்ல பொலிஸாரின் அனுமதியைப் பெறுமாறு கிராம சேவை அலுவலர் உயிரிழந்தவரின் சகோதரர்களுள் ஒருவரிடம் கேட்டுக் கொண்டார். பொலிஸார் வீட்டிற்கு வந்து உடலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு கட்டாயப்படுத்தினர். வைத்தியசாலையில் PCR பரிசோதனைக்கு உத்தரவிட்டதோடு ஜனாஸா பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அடுத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் குடும்பத்திற்கு கூறப்பட்டது. அவரது மரணம் திடீர் கொரோனா மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கட்டாய இராணுவ தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டனர்.



நவம்பர் 2 ஆம் திகதி, 78 வயதான அகமது ஜமால்தீன் அப்துல் றாஸிக், தலையில் ஏற்பட்ட காயத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் விபத்து விடுதிக்கு மாற்றப்பட்டார். பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட விடுதிக்கு மாற்றப்பட்டார். அடுத்த நாள் அவர் மரணமடைந்ததோடு அவரது ஜனாஸா பிரேத அறையில் வைக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அவரது ஜனாஸாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. பின்னர் பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதால் நவம்பர் 4 ஆம் திகதி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சம்மதம் பெறப்படாமல் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மரணம் திடீர் கொரோனா மரணம் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் அறிவித்தார். எனினும், பின்னர் அவரது பெயர் தேசிய கொரோனா மரணங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்பட்ட மூளை பாதிப்பினால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். ஆனால் இன்றுவரை அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.


சமூக பரவலை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியுள்ளது. எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரமே பல முஸ்லிம்கள் இறந்த பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, தகனம் செய்யப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்ட அவர்களது மரண அறிவித்தல்களில் ஏனைய நோய்களுடன் கொரோனா தொற்று இருப்பதாகக் கூறுகின்றன. ஜனாஸாக்கள் மீதான இக் கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனை காரணமாக குறிப்பாக ஏழை முஸ்லிம் குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன, அவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் பணம் செலுத்த முடியாததால் தேசிய வைத்தியசாலையில் கிடைக்கும் இலவச மருத்துவ சேவைகளையே நம்பியுள்ளனர். பலர் தினமும் கூலிவேலை செய்து உழைப்பவர்களாவர்.  அவர்கள் ஒரு சவப்பெட்டிக்கான பணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.


பாரதூரமான நோய்களால் வருந்திக் கொண்டிருக்கும் பல முஸ்லிம் ஏழைகள் தாம் பொய்யான காரணங்களின் அடிப்படையில் எரிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக மருத்துவ சிகிச்சைகளை பெறாமல் இருக்கின்றனர். இந்த வைத்தியர்கள் எமது சமூகத்திலுள்ள வயதானவர்களையும் கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களையும் மருத்துவ சிகிச்சைகளிலிருந்து விரண்டோடச் செய்கின்றனர். இதனால் எமது சமூகத்திலுள்ள வயதானவர்கள் தமக்கான சவக்குழியை தமது வீட்டுத் தோட்டத்திலேயே தோண்டி அங்கேயே தம்மை அடக்கம் செய்யுமாறு எம்மிடம் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் வைத்தியர்கள் தமது தொழில் மூலம் கற்றுக் கொண்ட நெறிமுறைகள் இதுதானா? எரிப்போம் என அச்சமூட்டுவதன் மூலம் அவர்கள் எமது சமூகத்திலுள்ள ஏழைகளை இலவச மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்வதிலிருந்தும் தடுக்கிறார்கள் அல்லவா?


தகனம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதோடு பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்ற வேண்டும். கொரோனா காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அந்த உடல்கள் மூலம் பரவலாம் அல்லது நிலத்தடி நீரை மாசுபடுத்தலாம் என்ற இலங்கை நிபுணர்கள் சிலரின் கூற்றை உறுதிப்படுத்த எந்த விஞ்ஞானபூர்வ ஆதாரமும் முன்வைக்கப்படாத நிலையில் 180 இற்கும் மேற்பட்ட நாடுகள் அடக்கம் செய்ய அனுமதித்துள்ளன.


$ads={2}


2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு அடக்கம் செய்யப்பட்டதால் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. 


ஆகவே, முஸ்லிம் சமூகத்தையும் ஏனைய சமூகங்களையும் அவர்களின் கலாசார, மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின்படி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பது தர்க்கரீதியானதும் மனிதாபிமான ரீதியானதுமாகும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.