இலங்கையின் கல்வி அமைச்சர் என்ற வகையில், எனக்கு நாட்டில் மதரஸா பாடசாலைகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய்வது எனது கடமை. அதை நான் செய்வேன் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலிருந்தே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மதரஸா பாடசாலைகளில் சேர்ப்பதற்கும் அவை செயல்படுவதற்கும் முறையான வழிமுறை வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழிமுறை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்றார்.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
$ads={2}
மதரஸா பாடசாலைகளில் கற்பிக்க வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், மேலும் இதுபோன்றவர்களின் பின்னணி மற்றும் கடந்தகால நடத்தை ஆகியவற்றைக் கவனிக்காமல் மதரஸாக்களில் கற்பிக்கப் அனுமதிப்பது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்கள் மற்றும் பின்னணியைக் கண்டறிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் உளவுத்துறையின் சேவைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மேலும் மதரஸா பாடசாலைகளில் கற்பிக்க அனுமதிக்கப்படும் நபர்கள், அத்துடன் கற்பிக்கப்படும் பாடங்கள், மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படும் விதம் போன்ற அனைத்து விடயங்களையும் கல்வி அமைச்சகம் மேற்பார்வையிடுவதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மதரஸா பாடசாலைகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட கல்வி அமைச்சருக்கு பொறுப்பு உள்ளது, அதை அவர் சரிவர நிறைவேற்றுவார் என தெரிவித்தார்.