நாளை (16) அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாறும் கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகள் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
மேலும் வேறு பகுதியிலிருந்து வரும் ஒருவர் புறக்கோட்டை வழியாக பஸ் அல்லது ரயில் மூலம் வேறு இடங்களுக்கு பயணிப்பதற்கான இயலுமை உள்ளதாகவும் அவர் கூறினார்.
$ads={2}
கொழும்பு மத்திய பேருந்து நிலையம், கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் தனியார் பஸ் நிலையம் ஆகியவை இன்று நள்ளிரவு தொடக்கம் செயற்படும். எனினும் கொழும்பு நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்படாது.
எந்தவொரு வெளிப் பகுதிகளிலிருந்தும் புறக்கோட்டைக்குள் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை, ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயணிகள் ஏற்றவோ, இறக்கப்படவோ மாட்டார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயணிப்பதற்கு முற்று முழுதாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மருதானை, டேம் வீதி, வாழைத்தோட்டம், புறக்கோட்டை, கோட்டை, கொம்பனித்தெரு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான சுகாதாரம் தொடர்பான நிறுவனங்கள், நீர், மின், தகவல் தொடர்பு, எரிசக்தி தொடர்பான நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மாத்திரம் திறந்திருக்கும். அத்துடன் ஊடக நிறுவனங்கள் ஆகியனவும் திறக்கப்படும் என தெரிவித்தார்.