ஜனாதிபதியாக ட்ரம்ப் மீண்டும் பதவியேற்பார் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளது அமெரிக்கா மட்டுமல்லாது உலக அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிட்டார்.
தேர்தலில் வெற்றிபெற 270 வாக்குகளை பெற வேண்டும். ஆனால் ஜோ பைடன் ஏற்கனவே 290 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுவிட்டார். எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதியன்று பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கு மட்டுமல்லாமல், கொரோனா தடுப்பு பணிகளுக்கான திட்டங்களை ஜோ பைடன் ஏற்கனவே வகுக்க தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பார் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். இவர் டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் பேசியபோது, “ட்ரம்பின் இரண்டாம் ஆட்சி சுமூகமாக ஏற்படும். தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது.
எல்லா வாக்குகளையும் நாம் முழுமையாக எண்ணப்போகிறோம். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் வெற்றியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படும். எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருக்கிறது. இதை அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது.” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் ட்ரம்ப் தான் வெற்றி பெற்றுவிட்டதாக கூறி வருகிறார். மேலும், தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்துக்கு போகப்போவதாக அவர் மிரட்டி வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் ட்ரம்ப் ஜனாதிபாக பதவியேற்பார் என அமெரிக்காவின் மிக மூத்த அதிகாரிகளில் ஒருவரான மைக் பொம்பியோ தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.