அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 294 வாக்குகள் பெற்று 46ஆவது அதிபராக பதவியேற்க உள்ளார். எனினும் தோல்வி அடைந்ததை டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழு ஏற்க மறுத்துள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 294 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இந்நிலையில், தோல்வியை ஏற்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் தயாராக இல்லை. இதுதொடர்பாக, ட்ரம்பின் பிரசார குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜோ பிடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறுதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. அவரது ஆதரவு ஊடகங்கள் அவருக்கு உதவி செய்வதற்காகவும், உண்மையை மறைக்கவும் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் முடிவடைய இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்பதுதான் உண்மை. எந்த ஒரு மாகாணத்திலும் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கவில்லை. முக்கியமான மாகாணங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்கள் சட்ட போராட்டம் இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது.
திங்கட்கிழமை முதல் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து சரியான வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க உள்ளோம். அமெரிக்க மக்கள் ஒரு நேர்மையான தேர்தலுக்கு தகுதியானவர்கள். இதுதான் நமது தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு காரணமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.