அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் 20ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தம்முடைய அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்து கொண்ட பின்பு அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (27) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
$ads={2}
இன்று நாட்டில் கொரோனா கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மலையக பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் பாரிய அளவில் தொற்று அதிகரித்து வருகின்றது.
ஒரு சில நகரங்களை மாத்திரம் மூடுவதனால் இதனை கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அதாவது மார்ச் மாதம் அளவில் மிக குறைவான கொரோனா தொற்றாளர்களே இலங்கையில் இருந்தனர். இதன்போது முழு நாட்டையும் முடக்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.