சிறுபான்மை மக்களால் இனவாதத்திற்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட நபர்கள் ஊடாகவே 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மக்களால் இனவாதத்திற்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட நபர்கள், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.
அன்று கருக்கலைப்பு கொத்துரொட்டி, கருக்கலைப்பு சத்திர சிகிச்சை என இனவாதத்தை தோற்றுவித்த அந்தக் குழு, ஹக்கீம் மற்றும் ரிஷாட் தரப்பின் ஆதரவுடன் தான் நேற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டது.
ரிஷாட் மற்றும் ஹக்கீமுக்கு எதிராக பதாதைகள் மற்றும் போஸ்டர்களை ஒட்டிய நபர்கள், அல்லது ரிஷாட் ஹக்கீம் ஆகியோரின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனில், நாம் ஒரு செக்கன் கூட அரசாங்கத்தில் இருக்கமாட்டோம் எனக் கூறியவர்கள், ரிஷாட் ஹக்கீம் ஆகியோரின் குழுவின் ஆதரவுடனையே 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
உண்மையிலேயே நேற்றைய வாக்கெடுப்பில் சபாநாயகர் இன்றி 149 வாக்குகள் இருந்தன. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்புக்கு வருகை தரவில்லை இந்நிலையில் உண்மையில் அரசாங்கத்திற்கு 148 வாக்குகளே இருந்தன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை." என்றார்.