சமூக இடைவெளியை மீறுபவர்களை இன்று (29) முதல் கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கொழும்பில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது, பெரும்பாலான மக்கள் குழுக்களாக ஒன்றுகூடி, சமூக இடைவெளியை உறுதி செய்யத் தவறிவிடுகிறார்கள்.
கொரோனா தொற்றுநோய்க்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்றாலும், கொரோனா வைரஸ் சுகாதார விதிமுறைகள் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளதால் நிலைமை இப்போது வேறுபட்டது என்று அவர் கூறியுள்ளார்.
இதன் விளைவாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது மீறுபவர்களைக் கைதுசெய்து தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்ல, சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வியாபார நிலையத்தில் சமூக இடைவெளி நடைமுறையில் இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.