அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடியுடன் கூடிய மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (30) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல் தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவர்.
குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப்பயந்து ஓடி வருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயத்தினை ஜீவணோபாயமாக கொண்ட குறித்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மேலும், அவர்களின் சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை 6.00 மணி முதல் அந்த மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.