![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwWI8gHELJWUY51hfkZ3o3bPlMNUZ-ROzl7V8CXUJZnD3EuVvMWzeq6xqaYYpvD7MKd5e3gjQ4UiVC9HW9rhNBuyb6SQ5caOUqXWRT_mWIWTIHLQoua_1kAgaBbV_mbhQwrOlujfdFt58/s16000/1554288924-Even-if-20-mn-signs-are-against-me-I-will-not-give-up-Wilpattu-fight-Bathiudeen-B.jpg)
ஒருவர் குற்றவாளியாக இருந்தால் சிறையில் அடைப்பது வழமை, அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு முன்னரே எனது சகோதரரை கைது செய்திருந்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இப்ராஹிம் என்ற வர்த்தகர் எனது சகோதரருக்கு 7 தடவைகள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரைக் கைது செய்திருந்தனர். இரு தினங்களில் விடுவிக்கப்படுவர் என்று அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
எனது சகோதரர் நிரபராதி, எந்தக் குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று நான் முன்னரே கூறியிருந்தேன். எவ்வாறான விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் தெரிவித்திருந்தேன்.
இந்நிலையில் 5 மாதங்கள் கடந்து எந்தக் குற்றச்சாட்டுடனும் அவர் தொடர்பில்லை என்ற அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு சம்பவத்துக்காக விசாரணை மேற்கொள்ளும்போது குற்றவாளியாக இருந்தால்தான் சிறையில் அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் கூறுகிறார்கள். அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 5 மாதங்கள் வைக்கப்பட்டிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த அரசுடன் இணைந்து நீங்கள் செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுவது குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.