நேற்று அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலககுழுவின் தலைவர் மாகந்துரே மதுஷ் உயிரிழந்த நிலையில், அவர் குறித்த சில மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சகோதர மொழி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சுட்டுக் கொல்லப்பட்ட 'சமரசிங்க அராச்சிகே மதூஷ் லக்ஷித' என்றும் அழைக்கப்படும் மாகந்துரே மதூஷ், மிக மோசமான பாதாள உலக கும்பல் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
அவர் போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் ஆயுதக் கொள்ளை போன்ற பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 11, 2006 அன்று ஒரு பாதாள உலக கும்பலின் தலைவராக மதூஷ் முன்னணிக்கு வந்தார். இதன் பின்னரே தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரான டேனி ஹிட்தெடிய சுட்டுகொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்றுமுதல் அவர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 கொலை குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவ உள்ளிட்ட அதிகாரிகள் குழுவை மே 09, 2017 அன்று பிலியந்தலையில் வைத்து கொலை செய்ய மாகந்துரே மதூஷ் திட்டமிட்டிருந்தார் என்ற சந்தேகமும் எழுந்திருந்தது.
இதற்கிடையில், பண்டிதகே சாந்த குமார என்ற 'கோஸ் மல்லி' படுகொலை 2018 மார்ச் 07 அன்று அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் மதூஷ் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல குற்றங்களில் சிக்கிய மாகந்துரே மதூஷ், போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜூன் 2, 2015 அன்று துபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.
பின்னர் அவர் சர்வதேச போதைப்பொருள் வியாபாரி ஆனார், நாட்டில் ஏராளமான ஆடம்பர குடியிருப்புகள் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.