ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 15,000 பேர் அறிந்திருந்தனர் என அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன சாட்சியமளித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் பங்கேற்று சாட்சியமளித்த போது அவர் இன்று (19) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர் இது குறித்து அறிந்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிலக்பூலில் காணப்பட்ட சஹ்ரான் ஹாசீமின் பயிற்சி முகாம் பற்றி புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருந்ததாகவும், ஏனைய முகாம்கள் பற்றிய தகவல்கள் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்த தகவல்களுக்கு அமைய செயற்படவில்லை என என் மீது மட்டும் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் எனவும், அதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை நான் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தேசிய புலனாய்வுப் பிரிவு பிரதானிக்கு வழங்கியிருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.