அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.
இதனடிப்படையில் பாராளுமன்ற அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் நீதியமைச்சர் அலி சப்றி, அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நோக்கில் இந்த புதிய திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.
இதன் பின்னர் 20வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த திருத்தச் சட்டத்திற்கான திருத்தங்கள் குழு நிலை விவாதத்தின் போது முன்வைக்கப்பட உள்ளன. இதனையடுத்து அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
அதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் பிரஜைகள் ஏழு நாட்களுக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என பாராளுமன்ற செயலாளரின் அலுவலகம் கூறியுள்ளது.
இதன் மூலம் அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவின் அரசியலமைப்பு ரீதியான செல்லுப்படி தன்மையை சவாலுக்கு உட்படுத்த முடியும்.