
பிரதமரினால் ஒன்லைன் விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.
எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளும் முறையொன்று நாடாளுமன்ற செயலகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் பூரணப்படுத்திக் கையளித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிலைமை காரணமாக தற்போது நாடாளுமன்றத்தினுள் காணப்படும் தகவல் தொழிநுட்ப முறைமைகளைப் பயன்படுத்தி ஒன்லைன் மூலம் தகவல்கள் திரட்டப்படுவதுடன், இதன்மூலம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தராமல் தேர்தல் தொகுதிகளில் இருந்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் registration.parliament.lk எனும் இணையப் பக்கத்துக்கு பிரவேசித்து உரிய கடவுச்சொல்லை பயன்படுத்தி இந்த விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தக் கடவுச்சொல் தொடர்பில் அறிவுறுத்துவதற்கு நாடாளுமன்ற பணியாட்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் அல்லது உறுதியுரை செய்வதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் உறுப்பினர்களின் தரவுகள் கட்டாயம் தேவைப்படுவதுடன் முடிந்தளவு விரைவில் அவற்றை வழங்குமாறு நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

