கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இருவர் நிந்தவூர் பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக பரப்பப்படும் விடயம் ஒரு வதந்தி என, கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார்.
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த இருவருக்கு கொரோனா நோய் தொற்றி இருக்கலாம் என சந்தேகித்து அவர்களை வைத்திய பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பள்ளிவாசல்களில் அறிவித்தலுக்காக நேற்று(16) வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பில் ஊடகவியலாளருக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மைக்காலமாக நாட்டில் கொரோனா அனர்த்தத்தின் தாக்கம் செல்வாக்கு செலுத்தியுள்ள நிலையில், எமது பகுதி மக்கள் இன்னும் பாதுகாப்பு நடைமுறை சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதில் அசமந்த போக்கினை கொண்டுள்ளனர். இதனை தவிர்க்கும் விதமாக குறிப்பாக, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியினால் மக்களுக்கென அறிவிக்க பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இரு கொரோனா நோயாளிகள் நிந்தவூர் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது.
எனினும், அதில் எவ்வித உண்மையும் கிடையாது. அவ்விடயம் மக்களினை விழிப்படைய செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த இரு இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரு வேறு இராணுவ முகாம்களில் கடமையாற்றி வருகின்றனர். இதுவே உண்மையாகும். எனவே, மக்களிற்கு விழிப்பூட்டல் நடவடிக்கைக்காக பிரசுரிக்கப்பட்ட இத்துண்டுப்பிரசுரத்தினை திரிபுபடுத்தியோ அல்லது வேறு நோக்கங்களுக்காக அதனை தவறாக பயன்படுத்தும் நோக்குடன் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என எச்சரித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் இந்த விடயத்தில் தவறான செய்திகளை பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறும், தொடர்ந்தும் சமூக இடைவெளிகளை பேணுவதுடன் நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் இவ்வச்சுறுத்தலில் இருந்து தவிர்ந்துகொள்ளும் முகமாக முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.
-Thinakran