சவூதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் பொரளை மயானத்தில் நேற்று (08) மாலை தகனம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு அவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இறுதிச் சடங்கிற்கு முன்பு உறவினர்கள் உடலைப் பார்க்க சுகாதாரத் துறையினர் அனுமதிக்கவில்லை. இந்நிலையிலேயே உறவினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
சவூதியில் பணி புரிந்து வந்த 44 வயதான கங்காதரன் என்பவரின் சடலமே இப்படி தகனம் செய்யப்பட்டிருந்தது. குறித்த நபர் இதயம் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய குறித்த நபரின் உடலை தகனம் செய்ய சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், உறவினர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
எனினும், பொலிஸ் அதிகாரிகள் நாட்டின் தற்போதைய சட்ட திட்டம் பற்றி விளக்கமளித்த பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. இதன்போது இறுதிக்கிரிகையை நடத்த உயிரிழந்தவரின் மகனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.