அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, கொழும்பு - ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியிருந்தார்.
அவர் தனது வீட்டில் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜிந்துப்பிட்டி பகுதியில் 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில், ஜிந்துப்பிடியில் 29 குடும்பங்களை சேர்ந்த சுமார் 154 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி இன்றையதினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில் கொரோனா தொற்று இல்லை என பீசிஆர் பரிசோதனையில் தெரியவந்த நபருக்கு சுய தனிமைப்படுத்தலின் பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் உடனடியாக ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன் அவரது குடும்பத்திலுள்ள எட்டு பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
என்ற போதிலும் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியிலிருந்து 29 குடும்பங்களை வெளியேற்றி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் அந்த பகுதியினை முடக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.